புரோ கபடி லீக் அடுத்த மாதம் தொடக்கம் - வெளியான அறிவிப்பு


புரோ கபடி லீக் அடுத்த மாதம் தொடக்கம் - வெளியான அறிவிப்பு
x

கோப்புப்படம்

11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் 18-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கபடியை பிரபலப்படுத்தும் வகையில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த தொடரின் கடைசி சீசனில் புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, உபி யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் 18-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதற்கட்ட ஆட்டம் அக்டோபர் 18ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 2வது கட்ட ஆட்டம் நவம்பர் 10ம் தேதி நொய்டாவிலும், 3வது கட்ட ஆட்டம் டிசம்பர் 3ம் தேதி புனேவிலும் நடைபெற உள்ளன.


Next Story