இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி


இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: சிந்து, பிரனாய் 2-வது சுற்றுக்கு தகுதி
x

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று தொடங்கியது.

ஜகர்த்தா,

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-16, 21-14 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரனாய், ஹாங்காங் வீரர் அங்குஸ் நா கா லாங்கை சந்திக்கிறார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் உள்ளூர் மங்கை கிரிகோரியா மரிஸ்கா துன்ஜூங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்சின் கிறிஸ்டோ போபோவ்-டோமா ஜூனியர் போபோவ் இணையை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய சாத்விக் சாய்ராஜ்-சிராக் கூட்டணி 21-12, 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது கிறிஸ்டோ-டோமோ இணை காயம் காரணமாக விலகியது. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 2-வது சுற்றை எட்டியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்,ஆர். அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 21-12, 6-21, 20-22 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஓங் யிவ் சின்-டியோ யி இணையிடம் தோற்று வெளியேறியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி தங்களது முதல் தடையை தாண்ட முடியாமல் நடையை கட்டியது.


Next Story