இந்திய தடகள வீராங்கனை தீக்சா 1,500 மீ ஓட்ட பந்தயத்தில் தேசிய சாதனை


இந்திய தடகள வீராங்கனை தீக்சா 1,500 மீ ஓட்ட பந்தயத்தில் தேசிய சாதனை
x

இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிராக் பெஸ்ட் 2024 என்ற பெயரில் தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், அமெரிக்காவின் கிறிஸ்சி கியர் 4 நிமிடங்கள் 3.65 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்திய தடகள வீராங்கனையான கே.எம். தீக்சா (25 வயது) 1,500 மீட்டர் போட்டியில் 4 நிமிடங்கள் 4.78 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து 3-வது இடம் பிடித்துள்ளார். அதனுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் என்பவர் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து இந்தியாவுக்கான தேசிய சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை தீக்சா முறியடித்து உள்ளார்.

2023-ம் ஆண்டில் புவனேஸ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் தேசிய இன்டர்-ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இது மாநிலங்களுக்கு இடையேயான போட்டியாகும். இதில், இறுதி போட்டியில் 4 நிமிடங்கள் 6.07 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்ததே தீக்சாவின் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சாதனையாக இருந்தது. அப்போது அவர், பெய்ன்ஸை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் நுழைவதற்கு, இந்த பிரிவில், 4 நிமிடங்கள் 2.50 வினாடிகளில் பந்தய தொலைவை கடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


Next Story