குடியரசு துணை தலைவரிடம் வாழ்த்து பெற்றார் தங்க மங்கை பி.வி.சிந்து
உலக பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஐதராபாத்,
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்டில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை துவம்சம் செய்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
உலக பேட்மிண்டனில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்து தாயகம் திரும்பிய பி.வி.சிந்துக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விளையாட்டு உலகில் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ள ‘தங்க மங்கை’ பி.வி.சிந்து, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தான் வென்ற பதக்கத்தை பிரதமரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் தற்போது, தங்கம் வென்ற பி.வி.சிந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வீட்டுக்கு சென்ற பி.வி.சிந்து அவரிடம் தங்கப்பதக்கத்தை காட்டி வாழ்த்து பெற்றார்.
Related Tags :
Next Story