10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி; சென்னையில் 19-ந்தேதி தொடக்கம்


10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி; சென்னையில் 19-ந்தேதி தொடக்கம்
x

கோப்புப்படம் 

10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி சென்னையில் 19-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

எம்.சி.சி.- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 95-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் களம் காணுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம் (ரெட்), பாரத் பெட்ரோலியம், மராட்டியம், தமிழ்நாடு ஆக்கி யூனிட் ஆகிய அணிகளும் பி பிரிவில் ஆக்கி கர்நாடகா, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், என்.சி.ஓ.இ போபால், மத்திய தலைமை செயலகம், ஒடிசா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர், சிறந்த முன்கள வீரர், சிறந்த கோல் கீப்பர் மற்றும் பின்கள வீரர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்பவர், தொடரின் மதிப்பு மிக்க வீரர் ஆகியோருக்கு உயர்ரக சைக்கிளுடன் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story