உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் அவுட்டில் சர்ச்சை...!!


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் அவுட்டில் சர்ச்சை...!!
x

image courtesy; AFP

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று அரங்கேறிய 10-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் அவுட் ஆனதில் சர்ச்சை ஏற்பட்டது.

மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ரபடா லெக்சைடில் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார். டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டோனிசின் வலது கையுறையில் பட்டபோது அந்த கை பேட்டில் இருந்து விலகி இருந்தது. இதனால் அவுட் கொடுத்திருக்கக்கூடாது என்று ஸ்டோனிஸ் வாதிட்டார். ஆனால் 3-வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரப் வலது கை பேட்டுடன் இல்லை என்றாலும் அந்த கையுறை பேட்டை பிடித்திருந்த இடது கையுறையில் உரசிக்கொண்டு இருந்ததால் இது அவுட் தான் என்று விளக்கம் அளித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story