மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலை..!


மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலை..!
x

Image Courtesy: @BCCIWomen

தினத்தந்தி 23 Dec 2023 12:37 PM GMT (Updated: 23 Dec 2023 12:38 PM GMT)

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்து, 157 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 406 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் மந்தனா 74 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 187 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் லிட்ச்பீல்ட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பெத் மூனி 33 ரன்னிலும், லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 45 ரன், தஹ்லியா மெக்ராத் 73 ரன், அலிசா ஹீலி 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Next Story