யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம் - விராட் கோலி


யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாகக்கூட இருக்கலாம்  - விராட் கோலி
x

image courtesy: PTI

தினத்தந்தி 18 May 2024 9:26 AM GMT (Updated: 18 May 2024 10:41 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் இன்றைய ஆடடத்தில் பெங்களூரு -சென்னை அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 42 வயதை தொட்டுள்ள அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் எம்.எஸ். தோனியும் தாமும் ஐ.பி.எல். தொடரில் எதிரெதிர் அணிகளில் விளையாடுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே ஒன்றாக விளையாடிய பழைய நினைவுகளை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விராட் கோலி போட்டியில் கடைசி வரை நின்றால் தோனி வெற்றிகரமாக பினிஷிங் செய்வார் என்று பாராட்டியுள்ளார்.

அதையே தாமும் உத்வேகமாக எடுத்துக் கொண்டு விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இந்தியாவின் எந்த மைதானத்திலும் தோனி விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாகும். யாருக்கு தெரியும் நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம். எனவே இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நாங்கள் மகத்தான நினைவுகளை கொண்டுள்ளோம். இந்தியாவுக்காக சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே இப்போட்டியில் எங்களை ஒன்றாக பார்ப்பது ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மஹி பாய் பற்றியும் 'அவர் ஏன் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்கிறார்?' என்று சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை பினிஷிங் செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் என்ன செய்கிறோம் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும். அவர் பலமுறை வெற்றிகரமாக போட்டியை பினிஷிங் செய்துள்ளார். எனக்கு அது மறக்க முடியாத நினைவாகும். கடைசி வரை நின்றால் நம்மால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது தோனிக்கு தெரியும்" என்று கூறினார்.


Next Story