2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்? - விவரம்


2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்தியா விலகினால் என்ன நடக்கும்? - விவரம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 July 2024 6:12 AM GMT (Updated: 15 July 2024 12:46 PM GMT)

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஐ.சி.சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தான் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டால் இந்திய அணி அந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்திய அணி தொடரில் இருந்து விலகினால் என்ன நடக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவுகளின் படி புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் உள்பட முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்றன. இதையடுத்து 9 மற்றும் 10-வது இடங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இருந்தன.

ஒருவேளை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்தியா விலகினால் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் 9-வது இடம் பிடித்த இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story