வங்காளதேச வன்முறையின்போது வீடு எரிக்கப்பட்டதா? லிட்டன் தாஸ் விளக்கம்


வங்காளதேச வன்முறையின்போது வீடு எரிக்கப்பட்டதா? லிட்டன் தாஸ் விளக்கம்
x

image courtesy: AFP

வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

டாக்கா,

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரண சூழல் நிலவு வருகிறது. வன்முறையின்போது அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் வன்முறையின்போது தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர் கூறுகையில்,

"நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடு எரிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. என்னுடைய குடும்பத்தினரும் நானும் முழு பாதுகாப்பாக உள்ளோம். எங்களுடைய தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதெல்லாம் ஒரு வதந்திதான் அதை யாரும் நம்ப வேண்டாம். நாம் ஒன்றாக இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அதில் மட்டும் கவனத்தை செலுத்துவோம். அதை தவிர்த்து வதந்திகள் தேவையில்லாத ஒன்று. என்னுடைய நாட்டிற்கு நான் நன்றியுள்ளனாக இருக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் எல்லாவித வன்முறைகளையும் விலக்கி ஒற்றுமையாக வாழ்வோம் என்று நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது" என்று கூறினார்.


Next Story