எனது கெரியரின் மிகப்பெரிய தருணம் இதுதான் - ரவி சாஸ்திரி


எனது கெரியரின் மிகப்பெரிய தருணம் இதுதான் - ரவி சாஸ்திரி
x

ஷமி, பும்ரா, சிராஜ், அஸ்வின் போன்ற இந்திய பவுலர்கள் பிட்டாக இருப்பதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை (பார்டர்-கவாஸ்கர் டிராபி) வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் சில பிரச்சனைகள் இருப்பதால் 3 - 1 என்ற கணக்கில் இந்தியா மீண்டும் வெல்லும் என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஷமி, பும்ரா, சிராஜ், அஸ்வின் போன்ற இந்திய பவுலர்கள் பிட்டாக இருப்பதாக முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதால் நிலையான ஓப்பனிங் ஜோடி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே அதைப் பயன்படுத்தினால் இம்முறையும் இந்தியா தொடரை வெல்லலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் வென்ற 2018 - 19, 2020 - 21 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் உலகக்கோப்பைக்கு நிகரான 24 கேரட் தங்கம் போன்ற வெற்றிகள் என்றும் ரவி சாஸ்திரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"நம்முடைய பவுலர்கள் பிட்டாக உள்ளனர். அது ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை ஒரு காலத்தில் இருந்தது போல் தற்போது வலுவாக இல்லை. அவர்கள் அணியில் சில வீரர்கள் ஓய்வு பெற்றனர் அல்லது சில வீரர்கள் தங்களது கெரியரின் முடிவில் இருக்கின்றனர். அதே சமயம் பெரும்பாலான வீரர்கள் செட்டிலாகியுள்ளனர். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியா கடுமையாக போட்டியிடும். அதில் எந்த கேள்வியும் இல்லை. பார்டர் - கவாஸ்கர் டிராபி உலகக்கோப்பையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கோப்பைகளை ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக வென்றது எனது கெரியரின் மிகப்பெரிய தருணமாகும். நான் 1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் வெற்றிகளில் அங்கமாக இருந்துள்ளேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் பெற்ற அந்த 2 வெற்றிகள் 24 கேரட் தங்கத்தை போன்றது" என்று கூறினார்.


Next Story