யாஷ் தயாள் குறித்து வர்ணனையாளர் முரளி கார்த்திக்கின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு


யாஷ் தயாள் குறித்து வர்ணனையாளர் முரளி கார்த்திக்கின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 March 2024 2:25 PM GMT (Updated: 27 March 2024 9:21 AM GMT)

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் வர்ணனையின் போது முரளி கார்த்திக் யாஷ் தயாள் குறித்து யாரோ ஒருவரின் குப்பை யாரோ ஒருவருக்கு புதையலாகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயாள் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை தற்போது பெங்களூரு வாங்கியுள்ளது.

இந்நிலையில், குஜராத் அணியில் குப்பையை போல் செயல்பட்ட யாஷ் தயாள் பெங்களூரு அணியில் புதையலை போல் செயல்படுவதாக வர்ணித்த முரளி கார்த்திகை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்? என்றும் யுவராஜ் சிங்கிடம் 6 சிக்சர்கள் கொடுத்தாலும் கடைசியில் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் ஸ்டுவர்ட் பிராட் எடுத்தவர்.

அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா என்றும் ரசிகர்கள் அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு இளம் வீரரை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தும் படி பேசிய முரளி கார்த்திக் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story