தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு


தொடர் தோல்வி எதிரொலி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
x

image courtesy; AFP

தினத்தந்தி 6 Nov 2023 4:16 AM GMT (Updated: 6 Nov 2023 6:39 AM GMT)

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

கொழும்பு,

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஊழல், நிதி முறைகேடு , சூதாட்டம் மற்றும் வீரர் ஒழுங்கீனம் எனக் குறிப்பிட்டு ஐசிசிக்கு இலங்கை மந்திரி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story