டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் - வங்காளதேச முன்னாள் கேப்டன்


டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் - வங்காளதேச முன்னாள் கேப்டன்
x

image courtesy: AFP

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது 2வது இன்னிங்சில் 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா தரப்பில் சுப்மன் கில் 119 ரன் (நாட் அவுட்), ரிஷப் பண்ட் 109 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இந்தியாவுக்கு அதிக சதம் அடித்த வீரர் என்ற தோனியின் (6 சதம்) சாதனையை சமன் செய்தார். இந்நிலையில், தோனி மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டையும் முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வருங்காலங்களில் உலக சாதனை படைப்பார் என்று வங்காளதேச முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் கூறியுள்ளார்.

இது பற்றி தனியார் சேனலில் நேரலை வர்ணனையில் அவர் பேசியதாவது, உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என கூறினார்.

அதே நிகழ்ச்சியில் பேசிய இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் கூறியதாவது, ரிஷப் பண்ட் 20-க்கும் மேற்பட்ட சதங்கள் அடிப்பதை நான் கண்டிப்பாக பார்ப்பேன் என கூறினார்.


Next Story