இது ஐ.பி.எல். கிடையாது - பாகிஸ்தான் போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த ரவி சாஸ்திரி


இது ஐ.பி.எல். கிடையாது - பாகிஸ்தான் போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த ரவி சாஸ்திரி
x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி, தனது 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் வரும் 9-ம் தேதி மோத உள்ளது.

இந்தியாவின் போட்டிகள் நடைபெறும் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தில் செயற்கையாக பொருத்தப்பட்டுள்ள பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சாதகமாக இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக அங்கு வேகம், பவுன்ஸ் அதிகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட தடுமாறுகின்றனர். மறுபுறம் அதை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுக்கின்றனர்.

அதனாலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டி தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்தை 96 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இந்தியாவும் எளிதாக வெற்றி பெற்றன. அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியாததால் நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்ற உணர்வைக் கொடுப்பதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் மைதானம் ஐபிஎல் தொடரில் உள்ள மைதானங்கள்போல இல்லை என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் யோசித்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று எச்சரிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"நீங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். வித்யாசமான பிட்சுகளில் வித்தியாசமான ஷாட்டுகள் இருக்க வேண்டும். இந்த மைதானம் முற்றிலும் வித்தியாசமானது. இது ஐபிஎல் தொடரில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது. அதனால் இங்கே நீங்கள் உங்களை உட்படுத்திக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து பவுன்ஸ் மற்றும் வேகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதை பார்த்த பின் சாதாரணமாக விளையாடுவதை காட்டிலும் 2 - 3 பந்துகள் நேரம் எடுத்து விட்டு உங்கள் வழியில் விளையாட வேண்டும்" என்று கூறினார்.


Next Story