இப்போதும் என்னால் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியும் - ரிங்கு சிங்


இப்போதும் என்னால் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியும் - ரிங்கு சிங்
x

image courtesy:PTI

ஜூனியர் கிரிக்கெட்டில் மட்டுமே சாதித்துள்ள தாம் சர்வதேச அளவில் எதையும் சாதிக்காததால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்

புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது.

இந்நிலையில் ஜூனியர் கிரிக்கெட்டில் மட்டுமே சாதித்துள்ள தாம் சர்வதேச அளவில் எதையும் சாதிக்காததால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். அத்துடன் இப்போதும் ரிசர்வ் வீரராக இருப்பதால் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற பின் அதை கையில் ஏந்தி முத்தமிடும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் ரிங்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கிரிக்கெட்டில் விளையாடியது முதல் நான் ஜூனியர் அளவில் மட்டுமே சில கோப்பைகளை வென்றுள்ளேன். சீனியர் அளவில் எதையும் வெல்லவில்லை. இப்போதும் நான் உலகக்கோப்பைக்கு செல்ல உள்ளேன். அதை நாம் வெல்வோம் என்று நம்புகிறேன். அதை வென்ற பின் நான் கோப்பையை கையில் ஏந்துவேன் என்று நம்புகிறேன். என்னுடைய நாட்டுக்காக மிகப்பெரிய கோப்பையை வென்று அதை கையில் தூக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும்.

எனவே அடுத்த முறை சிறப்பாக விளையாடுவதற்கு நான் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அந்த 5 சிக்சர்கள் அடித்த பின்பு என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. அதனால் விளம்பரங்கள் கிடைக்கின்றன. பலரும் என்னை அடையாளம் கண்டு கொள்கின்றனர். அதனால் தனியாக என்னால் செல்ல முடியவில்லை. அந்த வகையில் வாழ்க்கையில் ஏதோ செய்துள்ளேன் என்று நான் உணர்கிறேன்" எனக் கூறினார்.


Next Story