நான் இப்போது மகிழ்ச்சியான கேப்டனாக இருக்கிறேன் - இலங்கை கேப்டன் அசலங்கா பேட்டி


நான் இப்போது மகிழ்ச்சியான கேப்டனாக இருக்கிறேன் - இலங்கை கேப்டன் அசலங்கா பேட்டி
x

Image Courtesy: AFP 

இந்தியா ஒரு வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவோம் என சரித் அசலங்கா கூறியுள்ளார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 96 ரன்னும், குசல் மெண்டிஸ் 59 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, இலங்கையில் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 26.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன் மூலம் இலங்கைக்கு எதிராக 27 வருடங்களுக்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடரை கைப்பற்றிய பின் இலங்கை கேப்டன் சரித் அசலங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் இப்போது மகிழ்ச்சியான கேப்டனாக இருக்கிறேன். தொடர் முழுவதும் எங்கள் அணி அனைத்து விஷயங்களையும் சரியாக செய்தது. அவர்கள் (இந்தியா) ஒரு வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

சுழற்பந்து வீச்சு எங்களது பலம். எனவே, நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம். அதை நாங்கள் சிறப்பாக செய்தோம். அணியினர் இப்போது நல்ல மனநிலையில் உள்ளனர். எங்கள் பயிற்சியாளர் (சனத் ஜெயசூர்யா) மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அணியின் சூழலை வீரர்கள் நன்றாக அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story