அஸ்வின் எங்க நாட்டு வீரராக இருந்திருந்தால், ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் - இங்கிலாந்து முன்னாள் வீரர்


அஸ்வின் எங்க நாட்டு வீரராக இருந்திருந்தால், ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP 

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டன்,

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38) ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் பிறந்ததால் தப்பித்ததாகவும், ஒருவேளை அவர் ஆங்கிலேயராக இருந்திருந்தால் இங்கிலாந்து அணி அவரை முன்னதாகவே ஓய்வு பெற வைத்திருப்பார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அஸ்வின் ஆங்கிலேயராக இருந்தால் அவரை முன்னதாகவே ஓய்வு பெறச் சொல்லியிருப்பார்கள்.

ஏனெனில், இங்கிலாந்து அணியில் எப்போதும் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிசோதிக்கும் முறை இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. என்னைக் கேட்டால் அஸ்வினை விட ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் தான் சிறந்த வீரர் என்று கூறுவேன். அஸ்வின் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக பந்து வீசுவார்.

அஸ்வின் பந்து வீசும் போது ஒரு பேட்ஸ்மேன் எவ்வாறு யோசிப்பார் என்பதை மட்டுமே கருத்தில் கொள்வார். பேட்ஸ்மேன்களின் மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தி விக்கெட் எடுப்பதில் அஸ்வின் வல்லவர். இதுதான் அஸ்வினுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம். அஸ்வினுக்கு நன்றாக பேட்டிங் செய்யவும் வருகிறது. இதனால் தான் பேட்ஸ்மேன்கள் என்ன யோசிப்பார்கள் என்று அஸ்வினுக்கு தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story