இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே இலக்கு - யாஷ் தயாள்


இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே இலக்கு - யாஷ் தயாள்
x

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாஷ் தயாள் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

மும்பை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்ற முன்னணி வீரர்களும், கில், ஜெய்ஸ்வால் சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றில் அசத்திய யாஷ் தயாள் இந்திய அணிக்காக விளையாட முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வருட ஐபி.எல் தொடரில் பெங்களூரு அணியில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய யாஷ் தயாள் சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்து பெங்களூரு பிளே ஆப் செல்வதற்கு உதவினார். குறிப்பாக பிளே ஆப் செல்வதற்கு சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த தோனி பினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது பந்தில் அவரை அவுட்டாக்கிய யாஷ் தயாள் மேற்கொண்டு ஜடேஜாவையும் பினிஷிங் செய்யவிடவில்லை.

அதைத் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் யாஷ் தயாள் துலீப் கோப்பையின் முதல் ரவுண்டில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனால் அடுத்து நடைபெறும் வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அப்போட்டியில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனியை அவுட்டாக்க விராட் கோலி தமக்கு திட்டம் கொடுத்ததாக யாஷ் தயாள் கூறியுள்ளார். குறிப்பாக சிக்சர் அடித்தபோது பதற்றமடையாமல் 2வது பந்தில் தோனிக்கு வேகத்தை கொடுக்காமல் கொஞ்சம் மெதுவாக வீசுமாறு விராட் கோலி சொன்னதாக யாஷ் தயாள் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தம்முடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "மஹி பாய்க்கு எதிராக வேகத்தை கொடுக்க வேண்டாம் என்று விராட் பையா என்னிடம் சொன்னார். ஏனெனில் மஹி பாய் வேகமான பந்துகளை விரும்புவார். எனவே முதல் பந்து சிக்சர் சென்ற பின் விராட் பையா என்னை பதற்றமடையாமல் பந்து வீசுமாறு சொன்னார். அவருடன் பேசியது எனக்கு நிறைய உதவியது. அடுத்ததாக இந்தியாவுக்காக நீண்ட காலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்" என்று கூறினார்.


Next Story