இலங்கை அண்டர்-19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை


இலங்கை அண்டர்-19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை
x

Image Courtesy: @akalugalage / X

தினத்தந்தி 17 July 2024 10:28 AM GMT (Updated: 17 July 2024 12:11 PM GMT)

தமிகா நிரோஷனா 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.

அம்பலங்கோடா,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா. இவர் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் அம்பலங்கோடாவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கன்டமவாதாவிற்கு சொந்தமான வீட்டில் தமிகா நிரோஷனா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு கிரிக்கெட் வீரர் நிரோஷனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர கொலை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே நடந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த நாட்டு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சிறிய ரக கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கோர சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிகா நிரோஷனா இலங்கையின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இவர் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பர்வேஸ் மகரூப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட பலருக்கும் கேப்டனாக விளையாடியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் 20 வயதிலே கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டார்.

இவர் 2002ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Next Story