முதல் டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை


முதல் டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இலங்கை
x

image courtesy; twitter/@OfficialSLC

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்கள் குவித்தது.

சிலெட்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்ரம 61, குசல் மெண்டிச் 59 மற்றும் அசலன்கா 44 ரன்கள் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியும் அதிரடி காட்டியது. இலக்கை வெகுவாக நெருங்கிய வங்காளதேசம் வெற்றி பெற கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஷனகா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்படட 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 68 ரன்களும், மக்மதுல்லா 54 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மேத்யூஸ், பினுரா பெர்னண்டோ மற்றும் ஷனகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Next Story