யார் கூறினாலும் அதை மட்டும் செய்து விடாதீர்கள் - உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ்


யார் கூறினாலும் அதை மட்டும் செய்து விடாதீர்கள் - உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ்
x

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று உம்ரான் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், ஐபி.எல். தொடரில் 155 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அசுர வேகத்தில் பந்து வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அந்த காரணத்தால் 2022-ல் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் அந்த வாய்ப்பில் நல்ல லைன், லென்த்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசிய அவர் ரன்களை வாரி வழங்கினார். அதனால் அறிமுகத் தொடருடன் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் முன்னேற்றத்தை சந்தித்தார். அதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் 2023 ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கியதால் அவரை தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் தாம் விரைவில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்ற உம்ரான் மாலிக் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துவதற்கு கொஞ்சம் வேகத்தை குறைத்து நல்ல லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி பந்து வீசுங்கள் என உம்ரான் மாலிக்கிற்கு பலரும் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் யார் கூறினாலும் எக்காரணத்தைக் கொண்டும் வேகத்தை குறைத்து விடாதீர்கள் என்று அவருக்கு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆலோசனை தெரிவித்துள்ளார். ஏனெனில் வேகத்தை குறைத்ததால் முனாப் படேல் போன்ற நிறைய தரமான பவுலர்கள் பார்ம் அவுட் ஆனதாக தெரிவிக்கும் இர்பான் பதான் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"முதலில் அவர் தன்னுடைய வேகத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அதுவே மிகவும் முக்கியமான விஷயம். அவர் புதிய பந்தில் வலைப்பயிற்சியில் அதிகம் பந்து வீச வேண்டும். அது நல்ல கட்டுப்பாட்டை கொடுக்கும். தொடர்ந்து புதிய பந்தில் வீசினால் சரியான லென்த் பற்றிய ஐடியா அவருக்கு கிடைக்கும். அதுவே அவருடைய முதன்மை கவனமாக இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து அவர் தன்னுடைய யார்க்கர் பந்துகளிலும் வேலை செய்ய வேண்டும்" என்று கூறினார்.


Next Story