உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை


உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
x

image credit: @cricbuzz

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

புனே,

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்காவும், கருணரத்னேவும் களமிறங்கினர். இவர்களில் கருணரத்னே 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து, நிசாங்கா- கேப்டன் குசல் மெண்டிஸ் ஜோடி, 2-வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 62 ரன்களை எடுத்தது. உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிவரும் நிசாங்கா, 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். கேப்டன் குசல் மெண்டிஸ் (39), சமரவிக்ரமா (36), அசலங்கா (22), டி சில்வா (14), தீக்ஷனா (39) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story