காமன்வெல்த்: பார்படோஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி


காமன்வெல்த்: பார்படோஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி
x

Image Courtesy: ICC Twitter    

தினத்தந்தி 3 Aug 2022 7:07 PM GMT (Updated: 3 Aug 2022 8:57 PM GMT)

காமன்வெல்த்தின் கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட உள்ளது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பார்படோஸ் அணியுடன் மோதியது.

'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா ,2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தந்து 3-வது ஆட்டத்தில் 3வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களம் இறங்கினர். மந்தனா 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 76 ஆக உயர்ந்த போது ஷபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வந்த வேகத்திலேயே வெளியேறினார். அடுத்து விக்கெட் கீப்பர் தானியா பாட்டியாவும் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஜெமிமாவுடன் தீப்தி ஷர்மா ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்தது மட்டுமின்றி அதிரடியாக ஆடினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஜெமிமா அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்தார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் குவித்தார். பார்படோஸ் அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட உள்ளது.


Next Story