பி.சி.சி.ஐ.-க்கு புதிய செயலாளர் நியமனம்..? வெளியான தகவல்


பி.சி.சி.ஐ.-க்கு புதிய செயலாளர் நியமனம்..? வெளியான தகவல்
x

தற்போதைய செயலாளரான ஜெய்ஷா, ஐ.சி.சி.யின் தலைவராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஐ.சி.சி-யின் தலைவராக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்ஷா, ஐ.சி.சி.-யின் தலைவராகும் பட்சத்தில் பி.சி.சி.ஐ.-யின் புதிய செயலாளராக டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள ரோகன் ஜெட்லி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story