டிரக் டிரைவருடன் சண்டை... கம்பீரின் கடந்த கால சம்பவத்தை பகிர்ந்த இந்திய முன்னாள் வீரர்


டிரக் டிரைவருடன் சண்டை... கம்பீரின் கடந்த கால சம்பவத்தை பகிர்ந்த இந்திய முன்னாள் வீரர்
x

கம்பீர் மிகவும் ஆர்வமான கடினமாக உழைக்கக்கூடிய நபர் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா தோனி தலைமையில் வெல்வதற்கு கம்பீர் முக்கிய பங்காற்றியவர். அதே போல ஐபிஎல் தொடரில் கேப்டன் மற்றும் ஆலோசகராக அவர் 3 சாம்பியன் பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர். அதனால் அவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும் அவருடைய கோபமான குணம் அவ்வப்போது விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் அவர் வாக்குவாதம் செய்ததை மறக்க முடியாது. - அதன் பின் 10 வருடங்கள் கழித்து 2023 சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்றியபோது மீண்டும் விராட் கோலியுடன் மோதினார்.

இந்நிலையில் ஒருமுறை டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் கோபமடைந்த கவுதம் கம்பீர் இறங்கி சென்று டிரக் டிரைவரை அடிக்கச் சென்றதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கம்பீரின் இந்த கடந்த கால சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு:-

"கவுதம் கம்பீர் ஒரு முறை டெல்லியில் டிரக் டிரைவருடன் சண்டையிட்டார். அவர் தன்னுடைய காரிலிருந்து இறங்கி ட்ரக்கில் ஏறி டிரைவரின் சட்டை காலரை பிடித்தார். ஏனெனில் அந்த டிரைவர் தவறான டர்ன் எடுத்து எங்களை திட்டினார். அதை காரிலிருந்து பார்த்த நான் கவுதம் என்ன செய்கிறீர்கள்? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தேன். கம்பீர் மிகவும் ஆர்வமான கடினமாக உழைக்கக்கூடிய நபர். மிகவும் சீரியசான அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அவர் எப்போதும் தன்னுடைய இதயத்தை ஜெர்சியில் அணிந்து விளையாடுவார். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குணாதிசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன" என்று கூறினார்.


Next Story