5-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: மகுடம் சூடிய பாகிஸ்தான் - மழை விதியும்... சர்ச்சையும்...!!!


5-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: மகுடம் சூடிய பாகிஸ்தான் - மழை விதியும்... சர்ச்சையும்...!!!
x

5-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின.

5-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தின. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை அரங்கேறியது. இது தான் வண்ணமயமாக ஜொலித்த உலகக் கோப்பையாகும். இதில் சில புதுமைகள் புகுத்தப்பட்டன. வீரர்கள் வெள்ளைநிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட கலர்புல் உடைக்கு மாறினர். முதல்முறையாக வெள்ளைநிற பந்து பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான ஆட்டங்கள் மின்னொளியில் நடந்தன.

விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்ய முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர் மட்டுமே நிற்கும் விதியும் அறிமுகம் ஆனது. இது பேட்டிங்கில் அதிரடி மன்னர்கள் உருவாக வழிவகுத்தது. இந்த உலகக் கோப்பையில் முதலில் 8 அணிகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இனவெறி கொள்கையால் தென்ஆப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் அணிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு 'ரவுண்ட் ராபின்' முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

முகமது அசாருதீன் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆறுதலாகும். உலக் கோப்பையில் பாகிஸ்தானை முதல்முறையாக எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது. தனது முதலாவது உலகக் கோப்பையில் கால்பதித்த சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 173 ரன்னில் அடங்கியது. இந்தியாவுக்கு மற்றொரு வெற்றி ஜிம்பாப்வேக்கு எதிராக கிடைத்தது. தனது கடைசி உலகக் கோப்பையில் விளையாடிய முன்னாள் கேப்டன் கபில்தேவ் 8 ஆட்டங்களில் 161 ரன் மற்றும் 9 விக்கெட் எடுத்தார். இந்திய தரப்பில் எந்த ஒரு வீரரும் இந்தமுறை சதம் அடிக்கவில்லை.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு வெற்றியாவது ருசித்தது. சிறிய அணியான ஜிம்பாப்வே லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 134 ரன் மட்டுமே எடுத்த போதிலும் அதை கொண்டு 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.

லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (14 புள்ளி), இங்கிலாந்து (11 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (10 புள்ளி), பாகிஸ்தான் (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா (8 புள்ளி) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. அரைஇறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், இங்கிலாந்து 19 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியது.

மெல்போர்னில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் கோதாவில் குதித்தன. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் 25 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 70 ரன் மட்டுமே எடுத்து தடுமாறியது. பிற்பகுதியில் கேப்டன் இம்ரான்கான் (72 ரன்), ஜாவித் மியாண்டட் (58 ரன்), இன்ஜமாம் உல்-ஹக் (42 ரன்), வாசிம் அக்ரம் (33 ரன்) ஆகியோர் ரன்வேகத்தை அதிகப்படுத்தியதன் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்து சவாலான ஸ்கோரை அடைந்தது.

பின்னர் ஆடிய கிரஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து 49.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 3-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. 'ஸ்விங்' தாக்குதலில் மிரட்டிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக மின்னினார். இதன் மூலம் பாகிஸ்தான் 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பைக்கு முத்தமிட்டது. இத்துடன் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான்கான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். ஒரு சதம், 4 அரைசதத்துடன் மொத்தம் 456 ரன்கள் குவித்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் தொடர்நாயகன் விருதை பெற்றார். அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் வாசிம் அக்ரம் (18 விக்கெட்) முதலிடத்தை பிடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் மழைவிதி பெருத்த சர்ச்சையை கிளப்பியது. 2-வது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் சிட்னியில் சந்தித்தன. 45 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. இதை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணியின் கைவசம் 4 விக்கெட் இருந்தது. 12 நிமிடம் இழப்பு ஏற்பட்டதால் மழை விதி கொண்டு வரப்பட்டு ஒரு பந்தில் 22 ரன் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு மெகா போர்டில் காண்பிக்கப்பட்டது. இதை கண்டு கொதித்து போன ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தென்ஆப்பிரிக்க வீரர்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் திகைத்து போனார்கள்.

புதிய மழை விதிப்படி முதல் இன்னிங்சில் எந்த ஓவர்களில் குறைந்த ரன்கள் எடுக்கப்படுகிறதோ அந்த விகிதாச்சாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மழையால் 2 ஓவர்களை குறைக்க வேண்டி இருந்ததால் இங்கிலாந்தின் இன்னிங்சில் குறைந்த ரன் எடுக்கப்பட்ட இரு ஓவர்கள் ஆராயப்பட்டன. அதில் 2 ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எதும் எடுக்காமல் மெய்டனாக்கி இருந்தனர். அதில் எக்ஸ்டிரா வகையில் மட்டும் ஒரு ரன் எடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2 ஓவர் குறைக்கப்பட்ட போது அந்த ஒரு எக்ஸ்டிரா ரன் மட்டும் கழிக்கப்பட்டு இறுதியில் ஒரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி களம் கண்ட தென்ஆப்பிரிக்க வீரர்கள் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து விட்டு கண்ணீரோடு வெளியேறினர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு மழை எமனாக வந்தது என்றால் பாகிஸ்தானுக்கு அது தான் ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் பாகிஸ்தான் 40.2 ஓவர்களில் 74 ரன்னில் முடங்கியது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்திருந்த போது மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த புள்ளிமட்டும் பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்காவிட்டால் ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கும். பாகிஸ்தான் மூட்டையை கட்டியிருக்கும்.

இந்த உலகக் கோப்பையில் 10 ஆட்டங்கள் மழையால் பாதிப்புக்குள்ளானது. இறுதியில் சர்ச்சைக்குரிய மழை விதி தூக்கி எறியப்பட்டது. இதன் பின்னர் தான் 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறை கொண்டு வரப்பட்டு, இந்த நாள் வரை அது தொடருகிறது.


Next Story