3-வது டி20: சஞ்சு சாம்சன், சூர்யகுமார் அதிரடி... வங்காளதேசத்துக்கு 298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா


3-வது டி20: சஞ்சு சாம்சன், சூர்யகுமார் அதிரடி... வங்காளதேசத்துக்கு 298 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
x

Image Courtesy : @BCCI

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

இதில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள்(8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். பின்னர் மஹ்முதுல்லாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மறுபுறம் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள்(11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்தார். அடுத்து வந்த ரியான் பராக், 34 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் நோக்கி முன்னேறிய ஹர்திக் பாண்ட்யா, 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணியில் தன்சிம் ஹசன் சாகிப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 298 என்ற இமாலய இலக்கை நோக்கி வங்காளதேச அணி விளையாடி வருகிறது.


Next Story