442-வது ஆண்டு திருவிழா: தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி


தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கூட்டு திருப்பலி
x

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.

விழாவையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரிகளுக்காக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது.

இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னை எழுந்தருளி மாநகர வீதிகள் வழியாக பவனி வருவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பொருட்காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


Next Story