விநாயகர் சதுர்த்தி விழா 22-ந் தேதி தொடங்குகிறது


விநாயகர் சதுர்த்தி விழா 22-ந் தேதி தொடங்குகிறது
x

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரசம்ஹாரம்

விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ம் நாள் திருவிழாவான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது. அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

விநாயகர் சதுர்த்தியான 10-ம் திருநாள் அன்று (31-ந் தேதி) காலை தங்க மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நாச்சியப்பசெட்டி கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சிதம்பரம்செட்டி சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story