உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்து!


உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய பிராந்தியங்களை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புதின் கையெழுத்து!
x

இந்த 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர் மாளிகையில் நடைபெறும்.

மாஸ்கோ,

உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் அதிகாரபூர்வமான ஆணையில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.

தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் மாநில இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அங்கீகரிக்க நான் உத்தரவிடுகிறேன், என்று அதிபர் புதின் ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது. கடந்த 23-ந் தேதி தொடங்கி கடந்த திங்கள்கிழமை வரை இந்த வாக்கெடுப்பு நடந்தது.4 பிராந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர் மாளிகையில் கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷிய தலைநகரில் கூடியுள்ளனர். அப்போது ரஷிய அதிபர் புதின் பொதுமக்களிடையே உரையாற்றுவார் எனத் தெரிகிறது.


Next Story