முதன்முறையாக ராணி 2ஆம் எலிசபெத் நினைவாக விருது! இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்!


முதன்முறையாக ராணி 2ஆம் எலிசபெத் நினைவாக விருது! இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்!
x

ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்.

லண்டன்,

மறைந்த இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல், "ராணி எலிசபெத் II விருது" வழங்கும் விழா லண்டனில் நடந்தது.

அதில், "ஆண்டின் சிறந்த பெண்ணாக" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். அவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன், லண்டனில் வாழ்ந்து வரும் தமிழகத்தை சேர்ந்த உமா மற்றும் கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் ஆவார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக 42 வயதான சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டார்.

லண்டனில் நடந்த விழாவில் காணொலி மூலம் பேசிய சுயெல்லா பிரேவர்மேன், ஆசிய சாதனையாளர் விருதுகள் (ஏஏஏ) 2022 விழாவில், புதிய பாத்திரத்தை ஏற்பதை தன் வாழ்நாள் பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார். இந்த உயரிய விருதை, மறைந்த இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

சுயெல்லா பிரேவர்மேன் கூறுகையில், "என் அம்மாவும் அப்பாவும் 1960களில் கென்யா மற்றும் மொரிஷியஸ் நாடுகளிலிருந்து இந்த நாட்டிற்கு வந்தனர்.அவர்கள் எங்கள் ஆசிய சமூகத்தின் பெருமைமிக்க உறுப்பினர்களாக இருந்துள்ளனர். நான் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் இப்போது உள்துறை செயலாளராக நாட்டுக்கு சேவை செய்வது என் வாழ்வின் பெருமை" என்று தெரிவித்தார்.

ஆசிய சாதனையாளர் விருது இப்போது 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிரிட்டனின் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.


Next Story