தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம் - கோர்ட்டு அதிரடி உத்தரவு


தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம் - கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாங்காக்,

தாய்லாந்து அரசின் மந்திரிசபையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிச்சித் சைபான் கடந்த 2008-ம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். அவரை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிச்சித் சைபான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நடத்தை விதிகளை மீறிவிட்டார் என்றும் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மந்திரியாக நியமிக்கப்பட்ட பிச்சித் சைபான், 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் என்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டு அவரை நன்னடத்தை இல்லாதவர் என்று கூறியிருப்பதாக அரசியலமைப்பு கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது. தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story