டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம்

டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் ஆரம்பப்பள்ளியில் 23 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்த இர்மா ஹர்சியா என்பவரும் அடக்கம். இர்மாவுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இர்மாவின் கணவர் ஜோ ஹர்சிம்யா. இர்மா - ஜோவுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகுகிறது.
இதற்கிடையில், ஆரம்பப்பள்ளி துப்பாக்கிச்சூட்டில் தனது மனைவி இர்மா ஹர்சிம்யா உயிரிழந்த செய்தி கேட்டது முதல் அவரது கணவர் ஜோ ஹர்சிம்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில், இர்மாவின் கணவர் ஜோவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பள்ளி துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியையான தனது மனைவி இர்மா உயிரிழந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் அவரது கணவரான ஜோவும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.