இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை - 6 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்


இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை - 6 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
x

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

டாக்கா,

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளதேசம் கடந்த 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். எனவே சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக உள்ளது என மற்ற மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே உரிய தகுதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை நிறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அப்போது ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனவே அவர்கள் கட்டை மற்றும் கற்களால் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி மாணவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த போராட்டம் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story