#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி


#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 May 2022 10:44 PM GMT (Updated: 24 May 2022 12:20 AM GMT)

உக்ரைன் போரில் கடந்த 3 மாதங்களில் ரஷிய வீரர்கள் 15 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 4-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷியா இந்த போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

மேலும் இந்த போரில் உக்ரைனை காட்டிலும் ரஷியா பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்கும் ஆற்று பாலத்தை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழித்தபோது, ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகினர். இது போரில் ரஷியாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 3 மாதங்களில் பலியான ரஷிய படை வீரர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 9 ஆண்டுகள் நடந்த போரில் சோவியத் யூனியன் சந்தித்த உயிரிழப்புகளுக்கு சமம் இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1979 மற்றும் 1989-க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை சேர்ந்த சுமார் 15,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அதன்படி உக்ரைன் பேரில் ரஷியா இதுவரை 15 ஆயிரம் வீரர்களை இழந்திருக்கலாம் என இங்கிலாந்து கூறுகிறது.

ரஷியா கடைசியாக கடந்த மார்ச் மாதம் உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 1,300 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது. அதன் பிறகு இப்போது வரை போரில் தங்கள் தரப்பில் எத்தனை இழப்புகள் ஏற்பட்டன என்பதை ரஷியா பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனை சேர்ந்த சிறுவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், "நீங்கள் வலுவான மற்றும் கண்ணியமான குழந்தைகள். உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக உள்ளீர்கள். இங்கிலாந்தில் உள்ள நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்" என பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேர ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களுக்கு பிறகு லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் பல நகரங்களை ரஷிய படைகள் கைபற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் மிக முக்கிய நகரமான சீவிரோடோனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளுக்கும், உக்ரைன் வீரர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

இதனிடையே 2022-ம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் உலக நாடுகள் ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தி பேசினார். அவர் தனது உரையில், "ரஷியா மீது அதிகபட்ச தடைகள் விதிக்கப்பட வேண்டும். ரஷிய எண்ணெய்க்கு தடை விதிக்க வேண்டும். அனைத்து ரஷிய வங்கிகளும் தடை செய்யப்பட வேண்டும். ரஷியாவுடன் எந்த வர்த்தகமும் செய்யக்கூடாது" என கூறினார்.

Live Updates

  • 24 May 2022 12:20 AM GMT

    மேற்கு நாடுகளுடன் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டுமா என்று தெரியவில்லை - லாவ்ரோவ்

    மேற்கு நாடுகளுடன் உறவுகளை மீண்டும் நிறுவுவதற்கான சலுகைகளை பரிசீலிக்கும் என்றும், அது தேவையா என்று சிந்திக்கும் என்றும், ஆனால் சீனாவுடன் உறவுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என்றும் ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

  • 24 May 2022 12:19 AM GMT

    மேலும் போர்க்குற்ற வழக்குகள் உக்ரைனால் விசாரிக்கப்படும் என தகவல்

    உக்ரைன் குடிமகனை சுட்டுக் கொன்றதாக ரஷிய ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, உக்ரைனில் மேலும் பல போர்க்குற்ற வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் "இந்த மோதல் தொடர்வதால், இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளை நாம் பார்க்க வாய்ப்புள்ளது," என்று அல்-ஜசீரா செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்களுக்கு இரண்டு விமானிகள் வரும் நாட்களில் நீதிமன்றத்தில் காணப்படுவார்கள். இது அடிவானத்தில் அடுத்த வழக்கு. உக்ரேனிய வழக்குரைஞர்கள் தினசரி அடிப்படையில் அவர்கள் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி மேலும் மேலும் வழக்குகளை விசாரித்து வருகின்றனர் என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story