உக்ரைனுடனான போர்: புதிய ராணுவ தளபதியை நியமித்த ரஷியா


உக்ரைனுடனான போர்: புதிய ராணுவ தளபதியை நியமித்த ரஷியா
x

Image Courtesy: voi.id/en

போரில் கடந்த சில நாட்களாக ரஷியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 227-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதம் ஆகும். சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியாவிடமிருந்து உக்ரைன் மீட்டு வரும் நிலையில் இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீதான போரை தலைமை தாங்குவதற்கு புதிய ராணுவ தளபதியை ரஷியா இன்று நியமித்துள்ளது.

உக்ரைன் மீதான சிறப்பு நடவடிக்கைகளை தலைமை தாங்க ஜெனரல் செர்ஜி சுரொவ்கின் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story