இரவில் ஒன்றாக விளையாட்டு; மறுநாள் மனைவி சுட்டு கொலை, கணவர் தற்கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி


இரவில் ஒன்றாக விளையாட்டு; மறுநாள் மனைவி சுட்டு கொலை, கணவர் தற்கொலை:  அமெரிக்காவில் அதிர்ச்சி
x

ஆலின் ஜான்சனின் பக்கத்து வீட்டுக்காரர்கள், சம்பவத்திற்கு முந்தின நாள் இரவில் எங்களுடன் ஒன்றாக அவர்கள் சாப்ட்பால் விளையாடினார்கள் என கூறியுள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்தவர் ஆலின் ஜான்சன் (வயது 57). இவருடைய மனைவி கெரிலின் ஜான்சன் (வயது 52). இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் தங்களுடைய 32-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஜான்சன் அவருடைய மனைவி கெரிலினை சுட்டு கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கெரிலின், இசை பள்ளி ஒன்றில் 2 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதுபற்றி தெரிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், இந்த சம்பவத்திற்கான உள்நோக்கம் பற்றி போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஆலின் கடைசியாக வெளியிட்ட பதிவுகள் அவருக்கு, மனநலம் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அதில், தன்னை உடல்நலம் பாதித்த நபர் என கடைசியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில், நோய்வாய்ப்பட்ட நபர் என்றால் என்ன? என் மீது மோட்டார் சைக்கிள்கள் எப்போதும் அன்புடன் உள்ளன. பனிப்பரப்பில் சறுக்கி செல்லும் விளையாட்டும் (ஸ்கையிங்) என் மீது அன்புடன் உள்ளது என பதிவிட்டு இருக்கிறார்.

அதனுடன், பைக் ஓட்டுவது மற்றும் ஸ்கையிங் செய்யும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் பற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறும்போது, சம்பவத்திற்கு முந்தின நாள் இரவில் எங்களுடன் ஒன்றாக அவர்கள் சாப்ட்பால் விளையாட்டை விளையாடினார்கள்.

வருங்கால திட்டங்களை பற்றி ஆலின் எங்களிடம் கூறினார். அதனால், அவரிடம் எந்த சிக்கலும் இருந்ததுபோன்று எங்களுக்கு தெரிய வரவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் பலியானது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story