நேபாளத்தில் பிரதமர் பிரசாந்தாவின் அரசு கவிழ்கிறது


நேபாளத்தில் பிரதமர் பிரசாந்தாவின் அரசு கவிழ்கிறது
x

பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இறுதியில், சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, மற்றொரு முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி அமைத்தார். அதைத்தொடர்ந்து டிசம்பர் மாத இறுதியில் நேபாள பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார்.

இந்த நிலையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் நேபாள அதிபர் தேர்தலில் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுபாஷ் நெம்பாங்கு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராம் சந்திர பவுடல் களமிறக்கப்பட்டுள்ளார். இவர்களில் ராம் சந்திர பவுடலுக்கு ஆளும் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி உள்பட 8 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. பிரதமர் பிரசந்தாவின் கட்சி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரிக்காமல் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அங்கு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. முக்கிய கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால் பிரதமர் பிரசாந்தா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story