மது குடித்தபோது இளைஞருடன் வாக்குவாதம்: மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் - 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு


மது குடித்தபோது இளைஞருடன் வாக்குவாதம்: மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் - 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 17 May 2024 12:03 PM GMT (Updated: 17 May 2024 12:06 PM GMT)

இளைஞரும், முதியவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிசினோவ்,

கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மால்டோவா. அந்நாட்டின் உஷ்டியா கிராமத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இந்த மர்ம மரணம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கிய போலீசார் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இந்த கொலையில் மூதாட்டியின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்தனர்.

அப்போது, இளைஞர் தனது வீட்டில் உள்ள அறையில் மதுபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் இளைஞரின் வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டிற்கு பின்புறத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது, ஒருவர் உதவிகேட்டு அழும் குரல் கேட்டுள்ளது. மண்ணுக்குள் இருந்து அந்த குரல் வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அழுகுரல் கேட்ட பகுதியில் உள்ள மண்ணை போலீசார் தோண்டினர். அப்போது மண்ணுக்குள் ஒரு முதியவர் உயிருடன் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கழுத்தில் படுகாயங்களுடன் முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் 4 நாட்களாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்ததாக முதியவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

முதியவரும், இளைஞரும் 4 நாட்களுக்கு முன் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முதியவரை இளைஞர் தாக்கியுள்ளார். மேலும், அவரது கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த முதியவர் மயங்கியுள்ளார். மயங்கிய முதியவரை இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் (Basement) வைத்து பூட்டியுள்ளார். பின்னர் கீழ்தளத்தை மண்ணை கொண்டு மூடியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த முதியவர் மயக்கநிலையில் இருந்து மீண்ட நிலையில் 4 நாட்களாக உதவிகேட்டு மண்ணுக்குள் கண்ணீருடன் காத்திருந்துள்ளார். கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட மூதாட்டி, கைது செய்யப்பட்ட இளைஞர், உயிருடன் மீட்கப்பட்ட முதியவர் ஆகியோரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story