காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி


காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி
x

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் உயிரிழந்தனர்.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளில் 4 பேரை இஸ்ரேல் சிறப்புப்படை நேற்று அதிரடியாக மீட்டது.

காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பணய கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அதேவேளை, மீட்ப்பு நடவடிக்கையின்போது நுசைரத் முகாம் மீது இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தரைவழி மற்றும் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


Next Story