பக்ரீத் பண்டிகைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய ரூ.90,000 மதிப்பிலான ஆடு திருடு போனது - திருடர்கள் கைவரிசை


பக்ரீத் பண்டிகைக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய ரூ.90,000 மதிப்பிலான ஆடு திருடு போனது - திருடர்கள் கைவரிசை
x

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூ.90,000 மதிப்புள்ள ஆடு திருடப்பட்டுள்ளது

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூ.90,000 மதிப்புள்ள ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்நாட்டின் லாகூர் நகரில் வசித்து வருகிறார்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆறு ஆடுகளை கம்ரான் அக்மல் வீட்டினர் வாங்கியுள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியே தொழுவத்தில் வைத்து அதை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த விலை உயர்ந்த ஆடு ஒன்றை திருடர்கள் களவாடிச் சென்றுவிட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்றது. அங்கிருந்து ஆறு ஆடுகளில் ரூ.90,000 மதிப்புள்ள விலை உயர்ந்த ஆட்டை திருடர்கள் தூக்கி சென்று விட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

40 வயதான கம்ரான் அக்மல், 2017ம் ஆண்டுடன், தனது 15 வருட நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுவிட்டு பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.


Next Story