இலங்கை சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்


இலங்கை சென்றடைந்தார் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்
x

பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

கொழும்பு,

மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். தலைநகர் கொழும்புவில் அவர் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனா ஆகியோரை சந்திக்க உள்ளார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

முன்னதாக இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story