சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்பு..!


சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்பு..!
x

விண்ணில் சீனா அனுப்பிய 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட் ஒன்று கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்டது.

இதன்பின்னர், அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகிறது. இந்த லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டானது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை. இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறும்போது, ​​​​அவை பெரும்பாலும் வளிமண்டலத்தில் எரிந்து, கீழே தரையில் சிறிய ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் லாங் மார்ச் 5பி ராக்கெட்டானது சுமார் 108 அடி (33 மீட்டர்) நீளமும் 48,500 பவுண்டுகள் (22 ஆயிரம் கிலோ) எடையும் கொண்டது. இத்தகைய அளவு கொண்ட ராக்கெட்டில் இருந்து பெரிய பாகம் வளிமண்டலத்தில் முழுவதும் எரியாமல் பூமியில் எங்காவது தாக்கக்கூடும்., ராக்கெட்டின் 10% முதல் 40% வரை பூமியை தாக்கும் என்று மதிப்பிடுகிறது.

எனினும், கடந்த காலத்தில் சீன ராக்கெட் பாகங்கள் சில முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க கூடிய சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல்ஹாப்ட் கூறும்போது, சீனா மீண்டும் இதுபோன்று செயல்படுகிறது. இதனால், 88 சதவீத உலக மக்களின் வாழ்க்கை பேராபத்தில் உள்ளது. சீனாவின் விண்வெளி குப்பைகள் பூமியில் மக்களின் விழும் சூழலில், 700 கோடி மக்கள் பேராபத்தில் உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

எனினும், தனிநபர் என வரும்போது, இது மிக சிறிய அளவிலான ஆபத்தே என விண்வெளி கழகத்தின் நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு இதேபோன்று சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

இன்று ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை என அப்போது, மேற்கத்திய மற்றும் ஆசிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.


Next Story