கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வேண்டுகோள்


கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வேண்டுகோள்
x

உலகளாவிய ஸ்திரத்தன்மையை இது பாதிக்கலாம் என்பதால் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

டாவோஸ்,

கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு வைத்து இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த 13-ந் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. உள்நாட்டில் விலை ஏற்றத்தை தடுக்கிற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

ஆனாலும், ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற இடைக்கால ஏற்பாடாக அவற்றுக்கு மட்டும் ஏற்றுமதி அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது உக்ரைன் மீதான ரஷிய போரால் கோதுமை வினியோக சங்கிலி பாதித்துள்ளது. இதனால் உலகளவில் கோதுமை விலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ எம் எப்) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, கோதுமை ஏற்றுமதி மீது பிறப்பித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச உணவுப் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றலாம் மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை இது பாதிக்கலாம் என்பதால் கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story