சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கலீதா ஜியா உடல்நிலை ஒத்துழைக்கவில்லை - டாக்டர் தகவல்


சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கலீதா ஜியா உடல்நிலை ஒத்துழைக்கவில்லை - டாக்டர் தகவல்
x

ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, கலீதா ஜியாவை 5 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

டாக்கா,

வங்காள தேசம் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா (வயது 79) நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அல்லது லண்டன் அழைத்து செல்ல மருத்துவர்கள் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே கலீதா ஜியா விமானத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வதாக இருந்தால் அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்று அவரது தனிப்பட்ட டாக்டர் ஜாஹித் ஹொசைன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலை ஒத்துழைத்தால் அவரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலீதா ஜியா நேற்று மாலை தனது வீட்டிற்கு திரும்பினார். கலீதா ஜியா நீண்ட காலமாக கல்லீரல் ஈரல் அழற்சி, மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் கண்கள் தொடர்பான பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலீதா ஜியாவை ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு, கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைத்தது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story