பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 18 March 2024 8:35 AM GMT (Updated: 18 March 2024 12:45 PM GMT)

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்-மந்திரி அலி அமீன் கந்தாபூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெஷாவர்,

வடமேற்கு பாகிஸ்தானில் இன்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தின் ரக்ஸாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர்களை மேல் சிகிச்சைக்காக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்-மந்திரி அலி அமீன் கந்தாபூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்தவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் மற்றும் உதவி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story