ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 32 பேர் பலி


ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 32 பேர் பலி
x

ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

மொகதிசு,

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப், ஐஎஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் மொகதிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் நேற்று இரவு புகுந்த அல் ஷபாப் அமைப்பின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஓட்டலுக்குள் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும், ஓட்டலில் இருந்தவர்கள் சிலரை பணய கைதிகளாக சிறைபிடித்தனர். பின்னர், தங்கள் உடலில் மறைத்து கட்டி கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி பல மணிநேர போராட்டத்திற்குபின் பணய கைதிகளை மீட்டனர். ஆனாலும், இந்த தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் படுகாயமடைந்தனர்.

அதேவேளை, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story