உக்ரைன் போரில் கடந்த ஒரே மாதத்தில் 7 ரஷிய ராணுவ தலைமை அதிகாரிகள் பலி; அதிர்ச்சி தகவல்..!


Image Courtesy: @AFP twitter
x
Image Courtesy: @AFP twitter
தினத்தந்தி 26 March 2022 6:20 AM GMT (Updated: 26 March 2022 6:20 AM GMT)

ஒரு மாதமாக நடந்த போரில் 7 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டது மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன்,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவி கோரியதாக கூறியும், பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷியா திடீர் போரை தொடங்கியது. 

ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் ரஷிய பொருளாதாரத்தை குறிவைத்து பொருளாதாரத் தடைகள் விதித்தன.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 7  மூத்த ரஷிய ராணுவ தலைமை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ஸ்டெவ், தெற்கு ராணுவ மாவட்டத்தில் ரஷியாவின் 49வது ஒருங்கிணைந்த ஆயுத ராணுவத்தின் தளபதியாக இருந்தார். அவர் கடைசியாக போர்க்களத்தில் கொல்லப்பட்டவர் ஆவார்.

அதற்கு முன்னதாக, 6வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் விலைஸ்லாவ் யெர்ஷோவ் நீக்கப்பட்டார். ஒரு மாத காலப் படையெடுப்பின் போது காணப்பட்ட பெரும் இழப்புகள் மற்றும் போர் உத்திகளில் ஏற்பட்ட தோல்விகளின் காரணமாக அவர் நீக்கப்பட்டார். அவரும் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மற்றவர்களில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடினால் அனுப்பப்பட்ட செச்சென் சிறப்புப் படையைச் சேர்ந்த ஜெனரல் மாகோமட் துஷேவ்வும் ஒருவர்.

உக்ரைனில் முன்னோக்கி செல்லும் ரஷிய படைகளுக்கு ஏற்பட்ட, தகவல் தொடர்பு மற்றும் தளவாட சிக்கல்களால் ரஷிய ராணுவ தலைமை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரஷியாவின் 37வது மோட்டார் ரைபிள் படைப்பிரிவின் கமாண்டர், அவரது படைகளால் ஏற்பட்ட இழப்புகளின் அளவின் விளைவாக அவரது சொந்த துருப்புக்களால் கொல்லப்பட்டார்.

“உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷியப் படைகள் எதிர்கொள்ளும் மன உறுதி சவால்களுக்கு இது மேலும் ஒரு அறிகுறியாகும்” என்று உக்ரைன் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வரும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷிய தரப்பில் 1,300 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் போரில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என கள நிலவரத்தின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதமாக நடந்த போரில் 7 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டது மேற்கத்திய நாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“உக்ரைனில் ரஷியாவால் நிறுத்தப்பட்ட 115-120 பட்டாலியன் ராணுவ குழுக்கள், இதுவரை ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இனியும் இந்த போர் ரஷியாவிற்கு பயனுள்ளதாக அமையப்போவதில்லை" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Next Story