மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது - மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை சுமூகமாக முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், எடப்பாடி பழனிசாமி அரசு சுதந்திரமான அரசாக இல்லாமல் அடிமை அரசாக உள்ளது. இந்த அரசின் கட்டுப்பாடு நரேந்திரமோடி (பிரதமர்) மற்றும் அமித்ஷாவின் (உள்துறை மந்திரி) கைகளில் உள்ளது. அடுத்து வரும் திமுக ஆட்சி தமிழக மக்களுக்கான ஆட்சியாக உண்மையான ஆட்சியாக இருக்கும்.
தமிழகத்தில் பாஜக, அதிமுக முகமூடியுடன் வருகிறது. இந்தி மற்றும் சனாதன கலாச்சாரத்தை பாஜக நாடு முழுவதும் பரப்பி வருகிறது. இது சமூக கலாச்சார மற்றும் முற்போக்கு மரபுகளை கொண்ட தமிழ் சமூகத்திற்கு எதிரானது. மத்திய அரசு (பாஜக அரசு) அதிமுகவிற்கு ஆதரவாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. ஆகையால் தான் இந்த தேர்தல் மிகவும் முக்கியமாகும். இத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கடிக்கப்படவேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story